2019-02-05
இந்தியாவின் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறியும் அகழாய்வு பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்றது.
மூன்று கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் முதற்கட்டமாக பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016-ம் ஆண்டு 2-ம் கட்டமாகவும், 2017-ம் ஆண்டு 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
அகழாய்வில் வைகை ஆற்றின் கரையோரத்தில் பண்டைய தமிழர்கள் நகரம் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இருப்பனும் அகழாய்வு இடைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து தமிழரின் நகரநாகரீகம் பற்றி அறியும் நோக்கில் கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனால் கீழடியின் 4-ம் கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டது.
இந்த நிலையில், 4-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி கோரப்பட்டது. கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு 2018-19-ம் ஆண்டில் அகழாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். கீழடியில் மீண்டும் அகழாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ் அகழாய்வில் உலகம் வியக்கும் அளவிற்கு தமிழரின் நாகரநாகரீகம் பற்றிய உண்மைகள் வெளிவரும் என நம்பப்படுகின்றது.